Advertisment

தூத்துக்குடியில் உட்கட்சிக் குழப்பம்; தவிப்பில் த.வெ.க. தொண்டர்கள்!

ajithatvk

த.வெ.க. ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இதர மாவட்டங்களில் அக்கட்சி பொறுப்பாளர்களை நியமித்தாலும் தென் மாவட்டத்தில் மிகக் குறிப்பிடும்படியான 6 சட்டமன்றத் தொகுதிகளடங்கிய தூத்துக்குடி மாவட்டத்தின் கிளைக் கழகம் முதல் உயர் மட்டமான மாவட்டச் செயலாளர் வரையிலான பொறுப்பாளர்கள் தற்போது வரையிலும் நியமிக்கப்படாமல் கட்சி ஒரு கட்டமைப்பே இல்லாமலிருப்பது அரசியல் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. சுக்கானை இயக்குகிற திறமையான மாலுமியில்லாமல் தத்தளிக்கிற கப்பலைப் போன்றிருக்கிறது தூத்துக்குடி த.வெ.க. இதனால் கட்சித் தொண்டர்களிடையே தவிப்பும் குழப்பமும் நீடிக்கிறது என்கிறார்கள் நகர த.வெ.க.வினர்.

Advertisment

த.வெ.க.வின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, ‘த.வெ.க. கட்சி தொடங்கிய உடனேயே இதர மாவட்டங்களில் அனைத்துப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டாலும் தூத்துக்குடியை மட்டும் தலைவர் விஜய், தன்னுடைய நேர் கண்காணிப்பில் கொண்டுவந்துவிட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த பில்லா ஜெகன் விஜயின் ஆரம்பகால ரசிகர். அவரோடு நல்ல அன்டர்ஸ்டான்டிங்கில் இருப்பவர். அதுமட்டுமில்லாது ஜெகனும், அவரது குடும்பத்தாரும் விஜய்யின் குடும்பத்தாரிடம் நெருங்கிப் பழகுமளவிற்கு பழக்கம் கொண்டவர்கள். இதனால் இரண்டு குடும்பங்களுக்குள்ளும் பிடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அது இன்றளவுக்கும் தொடருகிறது. மேலும் பில்லா ஜெகன், ஆரம்ப காலத்திலிருந்தே தி.மு.க.விலிருப்பவர். அமைச்சர் அனிதாவுக்கு, நெருக்கமானவராக இன்றளவும் நீடித்து வருபவர்.

Advertisment

கட்சி ஆரம்பித்த விஜய், தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக பில்லா ஜெகனைத் தான் நியமிக்கிற திடமான எண்ணத்திலிருந்திருக்கிறார். தன்னுடைய இந்த விருப்பத்தை விஜய், பில்லா ஜெகனிடம் தெரிவித்தபோது, தான் தி.மு.க.விலேயே தொடர்ந்து பயணிப்பதால் தற்போது அது செட் ஆகாது என்றவரிடம் அவரது தம்பி சுமனைக் கேட்டிருக்கிறார். தனக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம். அரசியலில் நாட்டமில்லை என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து விஜய்க்காக தங்கள் தரப்பில் எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த பில்லா ஜெகனும் அவரது தம்பியும், தங்களது சகோதரியான அஜிதா ஆக்னலின் அரசியல் விருப்பம் பற்றி விஜய்யிடம் தெரிவித்தவர்கள் அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என்று தெரிவித்த நேரத்தில் அஜிதா ஆக்னலும் நான் அரசியலுக்கு வருகிறேன். மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் கட்சியையும் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வேன் என்றிருக்கிறார்.

ajithatvkk

இதையடுத்து அஜிதா ஆக்னலை கட்சியில் இணைத்த விஜய் அவரை தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கும் திடமான எண்ணத்திலிருந்திருக்கிறார். காரணம் அவரது கணக்கே வேறு. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது 13 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு பிறகு, தூத்துக்குடி வந்த விஜய் பலியான 13 பேர்களின் குடும்பத்திற்கும் சென்று ஆறுதல் தெரிவித்து நிதி உதவியும் செய்திருக்கிறார். பலியான 13 பேரில் 8 பேர் மீனவ சமுதாயம் சார்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் அந்த சமுதாயம் அதிகப்படியான உயிர்களை இழந்ததால் அ.தி.மு.க. மீது தீராத ஆத்திரத்தில் இருக்கின்றனராம். சம்பவத்திற்குப் பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும், மீனவ சமுதாயத்தின் வாக்குகள் அ.தி.மு.க.வின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லையாம். தங்களது மதம் சார்ந்த விஜய் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்ததோடு தங்களுக்கு ஆரம்பத்தில் அவர் உதவியதையும் நெகிழ்ச்சியாகவே பார்க்கிறார்களாம். இதனால் மீனவ சமுதாயத்தின் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் த.வெ.க. பக்கம் திரும்பும் என்று கணக்கிட்ட விஜய் அந்த சமுதாயம் சார்ந்த ஒருவரை மாவட்டப் பொறுப்பாளராக்கினால் தனது கட்சிக்கு அது வலுவாக இருக்கும் என்று திடமாக எண்ணுகிறார். அதனால் தான் மீனவ சமுகம் சார்ந்த அஜிதா ஆக்னலை மாவட்டப் பொறுப்பாளராக்கும் முடிவிலிருக்கிறார். மேலும் பெண் மாவட்டச் செயலாளர் என்பதால் தொகுதியில் பெண் வாக்காளர்களை வசப்படுத்தலாம். தி.மு.க. மாவட்டச் செயலாளரான கீதா ஜீவனுக்கு டஃப் கொடுக்கலாம் என்ற திட்டத்தில்தான் அஜிதா ஆக்னலை மாவட்டப் பொறுப்பாளராக்கவிருக்கிற விஜய் அவரை கட்சிப் பணிகளைப் கவனிக்கச் சொன்னவர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த நியமன விஷயத்தில் விஜய்யை மீறி கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை என்கிறவர்களே.

தலைவர் விஜயின் அசைக்கமுடியாத ஆதரவிருப்பதால் மா.செ. பொறுப்பு நிச்சயம் என்ற எண்ணத்தில் அன்றாடம் கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் அஜிதா ஆக்னல் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது, மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிப்பது என பல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்த வகையில் பல லட்சங்கள் செலவிட்டிருக்கிறாராம்.கட்சிப்பணிகளை நான் தொடர்ந்து செய்வதோடு, ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவியையும் செய்து வருகிறேன் என்கிறார் அஜிதா ஆக்னல். 

samuvel

இது இப்படியிருக்க தூத்துக்குடி வந்த த.வெ.க.வின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் அரசியல் சூழலை பற்றி விசாரித்திருக்கிறார். தூத்துக்குடியைப் பொருத்த வரையில் நாடார் சமுகம் சார்ந்தவர்களே அரசியல் கட்சிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்பாட்டிலிருப்பதே நடைமுறையாக இருக்கிறது. மாற்று சமுதாயம் சார்ந்தவர்கள் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டதில்லை என்று தெரிந்துகொண்ட என்.ஆனந்த், அந்த சமுகம் சார்ந்த எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜ் என்பவரை மாவட்டப் பொறுப்பாளராக்கும் முயற்சியிலிருந்திருக்கிறார். அரசியலுக்குப் புதிதான சாமுவேல் ராஜ், த.மா.க.வைச் சேர்ந்த எஸ்.டி.ஆர். விஜய சீலனின் தம்பியானவர். இதனிடையே தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான டேவிட் செல்வின் பிற கட்சிக்குச் சென்றுவிட்டு தற்போது த.வெ.க. பக்கம் திரும்பியிருக்கிறார். தனக்கிருக்கும் அரசியல் அனுபவத்தைக் கொண்டு த.வெ.க.வின் மூலம் ஸ்ரீவைகுண்டம் அல்லது தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாகி விடலாம் தொடர்ந்து கட்சியின் மாவட்ட பொறுப்பையும் பெற்றுவிடலாம் என்ற கணக்கோடு கட்சியில் இணைந்தவர். தனிக் கோஷ்டியாக செயல்பட்டு வருகிறாராம்.

davidtvk1

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நிதி நிறுவனம் மற்றும் கட்டுமானத் தொழிலை கொண்டிருக்கும் நல்ல பசையுள்ள தொழிலதிபரான கே.ஜே.ஆர். முருகன் என்பவரும் தன்னுடைய ஸோர்ஸ் மூலம் மா.செ. ஆகிவிட வேண்டும் என்ற திட்டத்தில் கட்சியின் மேல் மட்ட புள்ளிகளின் தொடர்பிலிருக்கிறாராம். கட்சியின் மா.செ. பொறுப்பை அடைவதற்கான ரேஸ்கள் இப்படி வேகமெடுத்துக் கொண்டிருக்க, விஜய்யோ அஜிதா ஆக்னலைத் தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலமர்த்த வேண்டும் என்ற முடிவில் என்.ஆனந்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதால் பொறுப்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது’ என்கிறார்கள். இந்தச் சூழலில் அக்டோபர் மாதம் 20ல் த.வெ.க. தலைவர் விஜய் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு வர அனுமதி தரவேண்டும் என்று அஜிதா ஆக்னல் தரப்பும் டேவிட் செல்வின் தரப்புகளும் தனித்தனியே மாவட்ட எஸ்.பி.யான ஆல்பர்ட் ஜானிடம் மனு கொடுத்தது பரபரப்பை கிளப்பியது. 

davidtvk

கி.க. பொறுப்பாளரிலிருந்து மாவட்டப் பொறுப்பாளர் வரை இதுவரை யாரும் நியமிக்கப்படாததால் கட்சிப் பணிகளில் தொய்வு. கைக்கெட்டும் தூரத்தில் தேர்தல் இருக்கிறது. வாக்காளர் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைப்பு, என்று தலைக்கு மேலே வேலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் பொறுப்பாளரே இல்லாமல் கட்சித் தொண்டர்கள் எந்தப் பாதையில் செல்வது, எந்த வேலைகளை கவனிப்பது என்று குழப்பத்துடனும் தடுமாற்றத்துடனிருப்பதைக் கட்சியின் மேல்மட்டம் வரை தெரிவித்தும் கவனித்ததாகத் தெரியவில்லை. பரம்பரை பரம்பரையான அரசியல் கட்சிகளோடு உத்திக்கு உத்தியிலிருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அக்கட்சிகளை ஈடுகொள்ளுமளவிற்கு டஃப் கொடுப்பதில் தான் இருக்கிறது புதிதாக களத்திற்கு வந்த த.வெ.க.வின் வலிமை என்கிறார்கள் பரவலாக.

tvk vijay Tuticorin Thoothukudi tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe