TVK executive accusation in the CBI investigation at karur stampede
கரூரில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக கரூரில் இருக்கக்கூடிய சிபிஐ முகாமில் அக்கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் 2வது நாளாக இன்று (30-12-25) ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் எஸ்.பி உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில், கரூர் கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம் என்று தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட அரசு அதிகாரிகள், கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி (walkie-talkie) மூலமாக தவெக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
Follow Us