கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. 

Advertisment

அதன்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த குழுவினர் கடந்த சில நாட்களாகக் கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. 

Advertisment

இதற்கிடையே அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரியும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச். தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வில் கடந்த 3ஆம் தேதி (03.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது த.வெ.க. குறித்து நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார். 

இத்தகைய சூழலில்தான் த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி சாணார்பட்டி காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment