தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisment

ஏற்கனவே டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அங்கம் வகிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

Advertisment

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''என்னதான் இருந்தாலும் இது பங்காளி சண்டை. பழசையெல்லாம் நினைத்துக் கொண்டு இருப்பதைவிட மக்கள் நலன், தமிழ்நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுப்பது தவறில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வருவதற்கு, மக்களாட்சி வருவதற்கு, நல்லாட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக புறப்பட்டுச் செல்கிறோம்'' என்றார்.  

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்றீர்களே என்ற கேள்விக்கு, ''பியூஸ் கோயலை தனியார் ஹோட்டலில் சந்திக்க உள்ளேன். சந்தித்து விட்டு நான் உங்களுக்கு பேசுகிறேன்'' என்றார்.

Advertisment

ஏற்கனவே பாஜக- அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமக இணைந்துள்ள நிலையில் தமிழகம் வந்துள்ள பியூஸ் கோயல் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது டி.டி.வி.தினகரன் பியூஸ் கோயலை சந்தித்துள்ள நிலையில், மறுபுறம் சென்னையில் பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.