தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அமித்ஷாவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே என்.டி.ஏ. கூட்டணிக்குச் சென்றோம். என்.டி.ஏ. கூட்டணியில் எங்களை இணைத்தவர் அப்போதைய தமிழக பாஜக தலைவர். எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க முடியாது. என்னைச் சந்திக்கவே எடப்பாடி பழனிச்சாமி தயங்குவார்.
அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியும்?. வேறு யாராவது ஒருவர் இருந்தால்கூட எங்களுக்கு பிரச்சனையில்லை; பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால் நாங்கள் எப்படி என்.டி.ஏ. கூட்டணியில் தொடர முடியும்? அதனால்தான் வெளியே வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டு நயினார் நாகேந்திரன் செயல்பட்டார். ஓ. பன்னீர்செல்வத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் எனக்காக தேனி தொகுதியையே விட்டுக்கொடுத்தவர்; அவருக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்?. அகங்காரத்துடனும் ஆணவத்துடனும் நயினார் நாகேந்திரன் பேசுகிறார். கூட்டணிக் கட்சிகளைக் கையாள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை. அவருக்கு தமிழ்நாட்டின் இன்றைய மனநிலை தெரியவில்லை,” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் டிடிவி தினகரன் இன்று (09.09.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எனக்கு அங்கே (கூட்டணியில்) உள்ளவர்கள் யார் மேலேயும் எந்த வருத்தமும் கிடையாது. கோபமும் கிடையாது. அன்றைக்கு மதுரையில் சொன்னேன். திரும்பவும் அதையே தான் சொல்கிறேன். ஒரே ஒரு நபரை (எடப்பாடி பழனிசாமி) அவரை சேர்ந்த ஒரு சிலரை அண்ட் அதர்ஸ் அப்படிங்கிற மாதிரி அவர்களைத் தவிர எனக்கு யார் மேலயும் வருத்தமில்லை. நான் இதனை ஓப்பனாக சொன்னேன். திருப்பி அதையே சொல்ல வைக்கிறீர்கள். அதிமுக சார்பாக முதல்வர் வேட்பாளரை நாங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கின்ற வேட்பாளரை அறிவிக்கின்ற பட்சத்தில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை” எனப் பேசினார்.