செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மான்புமிகு எதிர்கட்சி தலைவர் பெரும் மதிப்பிற்குரிய திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே” எனக் குறிப்பிட்டார். 

Advertisment

அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய சகோதரர் திரு டிடிவி தினகரன் அவர்களே” எனப் பேசியிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது டிடிவி தினகரன் பேசுகையில், “இது எங்கள் குடும்ப பிரச்சனை. ஒரு தாய் மக்களாக, ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்த எங்களுக்குள் உண்டான பிரச்சனை. இது கட்சி பிரச்சனைதான். எங்களுக்குள்  மனஸ்தாபம் இருந்து பிரிந்திருந்தது உண்மை. 

Advertisment

இதைத்தான் நான் நேற்றில் இருந்து சொல்லிக் கொண்டு  இருக்கிறேன். எங்களுக்குள் பிரிவு இருந்தது உண்மை. எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. ஆனால் அமித்ஷா 2021இல் முயற்சி செய்தார்கள். அப்போது நடக்காமல் போய்விட்டது. 2026இல் நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா என்னிடம் பேசும் போதும், மோடியும் இது தொடர்பாகப் பேசும் போதும், ‘நீங்களும்  பழனிசாமியும் ஒன்றாக இருந்து இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை நீங்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டார்கள். எங்களோடு வர வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நான் அவர்கள் பார்த்த அன்றைக்கு அதற்கு ஒத்துக்கொண்டு வந்துவிட்டேன். அது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிறது.

eps-ttv-nainar-with-modi

எடப்பாடி பழனிசாமியும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகுதான் அவர் என்னை அழைத்துப் பேசினார்கள். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. இதில் அச்சுறுத்தலோ, அழுத்தமோ யாருக்கும் இல்லை. நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியாக  2017 ஏப்ரல் மாதம் வரைக்கும் எப்படி இருந்தோமோ அதுபோல ஒன்றிணைந்து விட்டோம். எங்களுக்குள் ஒன்றும் பிரச்சனை இல்லை. பங்காளிகளாக இருந்த ஒரே தாய் மக்களாக இருந்தவர்கள் இன்றைக்கு நாங்கள் பார்த்த உடனே சேர்ந்து விட்டோம். அவ்வளவுதான்” எனப் பேசினார். 

Advertisment