சென்னை அடையாற்றில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று (15.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். எங்களை சந்திப்பதற்கே அவருக்கு உறுதியாகத் தயக்கம் இருக்கும். அதனால் அவர் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும், அங்கே உள்ள முக்கியமான தலைவர்களுக்கு நான் சொல்லி இருக்கிறேன்.
2021இல் இது நடக்காது என்று தெரிந்தும் அப்போது தான் என்னை டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்னை அணுகிய காரணத்தினால் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் அனுபவத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக எங்களுக்கு 40 தொகுதிகள் உங்கள் (என்.டி.ஏ.) கூட்டணியில் ஒதுக்கப்பட்டால் வருகிறோம் என்று சொன்னேன். அந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் நான் சொன்னேன். அதற்காக நான் அன்று (என்.டி.ஏ. கூட்டணிக்கு) செல்வதாக இருந்தேன். இன்றைக்கு இல்லை என்று கேட்பது தவறு. ஏனென்றால் என்னைச் சந்திப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் பழனிசாமிக்கு தயக்கம் இருக்கும்.
ஏனென்றால் எங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். ஆனால் அந்த கூட்டணி அமையாது என்று தெரிந்தும் என்னை கேட்ட அனுபவஸ்தர்களுக்காக, அவர்கள் வயதை காரணம் கொண்டு அவர்கள் அனுபவத்தை கண்டு நான் மரியாதை கொடுத்து சொன்னேன். அது அமையாது என்பது தெரிந்தும் நாங்கள் தனியாக போட்டியிட்டோம். நாங்களும் (அமமுக) தேமுதிகவும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் யார் ஆட்சிக்கு வரக்கூடாது. எந்தத் துரோகம் வென்று விடக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்திருக்கிறது. இந்த முறையும் எங்களது முதல் இலக்கு துரோகம் தமிழ்நாட்டு அரசியலிலே இந்திய அரசியலிலே வருங்காலத்தில் யாராலும் நினைத்து கூட பார்க்க கூடாது என்பதற்காக தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலையும் சந்திக்கிறது” எனப் பேசினார்.
Follow Us