அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (08-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என்.டி.ஏ கூட்டணியில் இன்னும் கட்சிகள் எல்லாம் வர வேண்டி இருக்கிறது. அதெல்லாம் வந்ததற்கு பிறகு சுமூகமாக தொகுதி பங்கீடு நடைபெற்று ஒற்றுமையாக தேர்தலை சந்தித்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம். 200 தொகுதிகளுக்கு மேல் உறுதியாக வெற்றி பெறுவோம். திமுக கூட்டணி வலுவான கூட்டணி, நாங்கள் 10 ஆண்டுகளாக இருக்கிறோம் கொள்கை கூட்டணி என்றெல்லாம் கதை விட்டு இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைத்து பல மாதங்கள் ஆகிறது ஆனால், திமுக சார்பில் குழுவே அமைக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் சொல்கிறார்.

Advertisment

அங்கே உள்ள குழப்பங்களால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் நீடிக்குமா என்ற நிலையே இருக்கிறது. ஆனால் எங்கள் கூட்டணி பலம் பெற்று வருகிறது. இந்த ஆட்சி, மக்கள் விரோத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஊழல் பெருக்கெடுத்து ஓடுகின்ற கஞ்சா மாடல் ஆட்சியாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை சொன்னதில் 90% நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு குடும்பம் இந்த ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து நின்றோம், நாங்கள் தனித்து நின்றதால் திமுகவுக்கு வாய்ப்பாக இருந்தது. ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு இருக்காது. விடியல் என்ற பெயரில் தமிழ்நாட்டில் இருக்கிற இருளாட்சி, மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தலைமையில அமைந்திருக்கிற
இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

Advertisment

எப்படி 2006இல் விஜயகாந்த் வந்த போது ஒரு பாதிப்பு இருந்ததோ, அது போன்ற பாதிப்புகள் பல கட்சிகளுக்கு இருக்கும். ஆனால் விஜய் வந்திருப்பது மூலம் அதைவிட அதிகமான பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. அது குறிப்பாக திமுக வாக்கு வங்கியை பெருமளவில் பாதிக்கும். அது என்.டி.ஏ கூட்டணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எங்களுக்கு அந்த பாதிப்பு இருக்காது. உறுதியாக அது எங்கள் வெற்றிக்கு உதவி செய்யும்” என்று பேசினார்.