தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அமித்ஷாவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகும் முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரமான முடிவு அல்ல; நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு. அரசியலை நான் வியாபாரமாகப் பார்க்கவில்லை. எங்களை ஒரு துக்கடா கட்சியாக பாஜக நினைத்தது. முன்னாள் பாஜக தலைவர் இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம். அதிமுகவிற்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையிலான பிரச்சனையை நயினார் நாகேந்திரனால் சரியாகக் கையாள முடியவில்லை,” என்றார்.
இதுகுறித்து பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அமமுகவை எப்படி வெளியே போகச் சொல்ல முடியும்? எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். நான் பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே, டிடிவி தினகரனும் அமமுகவும் என்.டி.ஏ. கூட்டணிக்கு வேண்டும் என்று கூறி வருகிறேன். நாங்கள் அமமுகவை ஒருபோதும் துக்கடா கட்சியாக நினைக்கவில்லை. எங்கேயும் நான் ஆணவமாக பேசவில்லை. டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வமும் பேசி வைத்துக்கொண்டு பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. டிடிவி தினகரன் கூறியவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை” என்றார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே என்.டி.ஏ. கூட்டணிக்குச் சென்றோம். என்.டி.ஏ. கூட்டணியில் எங்களை இணைத்தவர் அப்போதைய தமிழக பாஜக தலைவர். எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க முடியாது. என்னைச் சந்திக்கவே எடப்பாடி பழனிச்சாமி தயங்குவார். அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியும்? வேறு யாராவது ஒருவர் இருந்தால்கூட எங்களுக்கு பிரச்சனையில்லை; பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால் நாங்கள் எப்படி என்.டி.ஏ. கூட்டணியில் தொடர முடியும்? அதனால்தான் வெளியே வந்துவிட்டோம்.
நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டு நயினார் நாகேந்திரன் செயல்பட்டார். ஓ. பன்னீர்செல்வத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் எனக்காக தேனி தொகுதியையே விட்டுக்கொடுத்தவர்; அவருக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்? அகங்காரத்துடனும் ஆணவத்துடனும் நயினார் நாகேந்திரன் பேசுகிறார். கூட்டணிக் கட்சிகளைக் கையாள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை. அவருக்கு தமிழ்நாட்டின் இன்றைய மனநிலை தெரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.