முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமைகள் மீட்பு கழகத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அதிமுகவில் தன்னை இணைத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இந்த சூழ்நிலையில், அவர் திமுகவுடன் இணக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, அவர் பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசினார். இதன் மூலமாக அவர், விரைவில் திமுகவுடன் கூட்டணி சேருவார் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “எதிர்கட்சி தலைவராக, எதிர்கட்சி துணைத் தலைவராக, மூன்று முறை முதல்வராக எல்லாம், பொறுப்பேற்று பணியாற்ற வாய்ப்பு கிடைத்த அந்த சட்டமன்றத்தில், ஐயப்பன் முதல்வரை  வாழ்த்தி பேசுவது, அவர்கள் கட்சியில் போய் சேர்வதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் கோடானு கோடி தொண்டர்கள் தெய்வமாக தினமும் போற்றி வழங்குகிற எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கலங்கத்தை உருவாக்குகின்ற விதமாக, ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்துடைய ஆதரவோடு வாழ்த்துக்களோடு பேசுவதாக சொன்னது தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Advertisment

ஓபிஎஸுக்கு எவ்வளவோ எண்ணங்கள் இருக்கலாம், அவர் இன்னும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இன்னொரு கட்சிக்கு கூட செல்லலாம். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு அவர் மறைவுக்கு பிறகு அந்த ஆட்சிக்கு எதிராக 2017ல் திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்த்து வாக்களித்தவர்தான் நண்பர் ஓபிஎஸ். திரும்பவும் அவர்களை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு, எடப்பாடி பழனிசாமியோடு பேசி அவரை துணை முதல்வராக்கினார்கள். நண்பர் ஓபிஎஸ், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்து விட்டார் என்பது உண்மையிலேயே வருத்தத்தக்கது. 2017 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி அவரை பதவியிலிருந்து இறக்கியது ஒரு நியாயமான நடவடிக்கை என்பதை இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கலங்கம் விளைவிக்கின்ற விதமாக அவர்களுடைய புகழுக்கு கலங்கம் விளைவிக்கின்ற விதமாக அவர்கள் செயல்பாடு உண்மையிலேயே யாராலும் மன்னிக்க முடியாது. என்றைக்கும் உப்பை தின்றவர்கள் தண்ணீர்  குடித்துதான் ஆகணும். அதற்கான பதிலை அவர்கள் மக்கள் மன்றத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால், இவர்கள் ரெண்டு பேரும் பேசியதை ரசித்து புன்னுருவளோடு ரசித்து கைதட்டி ரசித்த அந்த துரியோதன கும்பலை பார்த்தது எனக்கு மார்ச் 25, 1989 தான் ஞாபகம் வந்தது. அன்றைக்கு ஜெயலலிதாவை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்களோ, இன்றைக்கு அந்த கும்பல் கைதட்டி அதை ரசித்தது புண்முறுவல் இட்டு ரசித்தது அதற்கு ஏற்ப இவர்கள் நடந்து கொண்டது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இதைவிட ஒரு தீங்கு யாரும் இழைக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் செயல்பாடு இருந்ததாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அவருக்கு திமுகவுக்கு செல்வதிலோ அல்லது, அவர் திமுக ஆதரவாக இருப்பதிலோ அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்” என்று கூறினார். 

Advertisment