இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக நேற்று (30-07-25) மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.  இது குறித்து தனது தளமான ட்ரூத் சோசியலில் அவர் தெரிவித்ததாவது, ‘நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தைச் செய்துள்ளோம். ஏனென்றால், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவைகளில் ஒன்றாகும். மேலும் அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மற்றும் அருவருப்பான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளனர். மேலும் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களில் ஒருவராக உள்ளனர். உக்ரைனில் நடக்கும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நேரத்தில் இது எல்லாம் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்டணத்தையும் அபராதத்தையும் செலுத்தும். இந்தியாவுடன் நமக்கு மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது’ எனப் பதிவிட்டிருந்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தின் டிரம்ப் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட அதற்கு பதிலளிக்கவில்லை. உலக தலைவர்கள் யாரும் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி ஆணித்தரமாக பேசிய அடுத்த நாளே, தனது வேண்டுகோளின் பேரில் இந்தியா பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என டிரம்ப் 30வது முறை பேசி மீண்டும் பரப்பரப்பை கிளப்பினார். மேலும், இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கை நாளை (01-08-25) அமலுக்கு வரவுள்ள நிலையில், அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை தெரிவித்தார். இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதல் அபராதங்களுடன் 25% வரி விதித்த பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிரம்ப், “ உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கிறது. ஆனால், நாங்கள் இப்போது அவர்களுடன் பேசி வருகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். 100%, 150% என அதிகமாக விதிக்கப்படுகிறது. அவர்கள் 175%ஐ விட அதிகமாக வரி விதிக்கின்றனர். நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் பிரிக்ஸ் அமைப்பிலும் இருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளின் குழுவில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. அந்த அமைப்பு அமெரிக்க டாலர் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. டாலரை யாரும் தாக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி எனது நண்பர். ஆனால் அவர்கள் எங்களுடன் வணிக ரீதியாக அதிகம் வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் நம்மிடம் நிறைய விற்கிறார்கள், ஆனால் நாம் அவர்களிடமிருந்து வாங்குவதில்லை. ஏன் தெரியுமா? ஏனென்றால் வரி மிக அதிகமாக உள்ளது. இப்போது அவர்கள் அதை கணிசமாகக் குறைக்கத் தயாராக உள்ளனர். ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இப்போது இந்தியாவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.

இந்த நிலையில், இந்தியாவை மீண்டும் டொனால்ட் டிரம்ப் தாக்கி பேசியுள்ளார். இது குறித்து டிரம்ப் தனது தளமான ட்ரூத் சோசியலில், ‘இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இரு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது. இரு நாடுகளும் தங்களின் இறந்த பொருளாதாராத்தை ஒன்றாக கொண்டு வர முடியும். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்துள்ளோம். அவற்றின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. அதே போல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே வைத்திருப்போம்’ என்று கடுமையாக தாக்கியுள்ளார்.