Trump reduces tariffs on India for agrees to stop buying oil from Russia
அமெரிக்காவில் கடந்த 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரி புதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது.
அதனை தொடர்ந்து, இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். ஆனால், எந்த காரணத்தை கொண்டும் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்த மாற்றமும் இருக்காது தேவைப்பட்டால் கூடுதலாக இறக்குமதி செய்வோம். இந்திய நாட்டு மக்களின் நலனை எங்களுக்கு பிரதானமானது என்று இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், முதற்கட்டமாக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரியை 18% ஆக குறைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிகர் டொனால்ட் டிரம்ப் தொலைப்பேசி வாயிலாக பேசினார். அதில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து டிரம்ப் தனது சோசியல் தளமான சோசியல் ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியது பெருமையாக இருந்தது. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர். அவர் நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர். வர்த்தகம், ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவிலிருந்தும், வெனிசுலாவிலிருந்தும் இன்னும் பலவற்றை வாங்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும். இது ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக, அவரது வேண்டுகோளின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன் மூலம் அமெரிக்கா குறைக்கப்பட்ட பரஸ்பர கட்டணத்தை வசூலிக்கும், அதை 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கும். அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் கட்டணங்கள் மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அவர்கள் முன்னேறுவார்கள். அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல தயாரிப்புகளின் $500 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக, மிக உயர்ந்த மட்டத்தில் அமெரிக்கரை வாங்க பிரதமர் உறுதியளித்தார். இந்தியாவுடனான எங்கள் அற்புதமான உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் விஷயங்களைச் செய்து முடிக்கும் இரண்டு பேர், இது பெரும்பாலானவர்களுக்குச் சொல்ல முடியாத ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்.
Follow Us