Trinamool Congress to field personalities at Rajya Sabha elections
நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்பிக்களுக்கான பதவிக்கலாம் முடியவுள்ள நிலையில், அந்த இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான தேர்தல் வருகின்ற மார்ச் 16 அன்று நடைபெற உள்ளது. இதில், மேற்குவங்க மாநிலத்தில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளது. 294 இடங்களைக் கொண்ட மேற்குவங்க சட்டமன்றத்தில், திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளதால் அதற்கு நான்கு இடங்களும், எதிர்க்கட்சியான பாஜகவிற்கு ஒரு இடமும் கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த ஐந்து இடங்களுக்கான வேட்புமனு நேற்று (05-03-26) தாக்கல் செய்யப்பட்டது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் மேற்கு வங்க அரசியலில் கவனம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் சட்டம், நிர்வாகம் மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வியூகம் மேற்குவங்க அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதாவது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மேனகா குருசாமி, முன்னாள் மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ் குமார், வங்காள சினிமாவின் மூத்த சூப்பர் ஸ்டார் கோயல் மல்லிக் மற்றும் மாநில அமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு துறைகளில் ஆளுமையாக உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இது வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒரு யுக்தியாக இருக்குமோ? என்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அது நேரத்தில், மீதமுள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் ராகுல் சின்ஹா வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us