திருப்பூர் மாவட்டம் பொன்னிகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் முரளி என்கிற ஸ்ரீ சிவானி(24). திருநங்கையான இவருக்கு அருண் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் அந்த வாலிபருடன் ஸ்ரீ சிவானி ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஸ்ரீ சிவானி கட்டிட கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தனது உறவினர் இந்திரா ராணி என்பவரிடம், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிவானி ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். இந்திரா ராணி மகளிர் குழுவில் இருந்து அந்த பணத்தை வாங்கி ஸ்ரீ சிவானியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அப்பணத்தை திரும்ப செலுத்த முடியாததால், ஸ்ரீ சிவானிக்கும், இந்திரா ராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பணத்தைக் கேட்டு இந்திரா ராணி நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த ஸ்ரீ சிவானி, நேற்று முன்தினம், மண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், ஸ்ரீ சிவானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தகுமார் அளித்த புகாரின் பேரில், வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.