சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று திருவள்ளூர் அருகே வந்தபோது நேற்று (13-07-25) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீப்பற்றி எரிந்த நிலையில், தீயானது ரயிலின் 8 பெட்டிகளுக்கு மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால் 13 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் வசதிக்காகத் திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர், தண்டவாளத்தில் ரயில் விழுந்த பெட்டிகளை ராட்சத கிரேன்கள் மூலம் இரவிலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
சரக்கு ரயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பிறகு இன்று ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன.