tragedy to woman student went to celebrate her birthday with her friend
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் ரேஷ்மா (24, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற மாணவி முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்தார். இவர் கடந்த 10ஆம் தேதியன்று தனது வகுப்பு தோழன் பியூஸ் தானொட்டியா என்பவருடன் பிறந்த நாள் கொண்டாடப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பிறந்த நாள் கொண்டாட சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஆனால், அன்றைய தினமே அவரது எண்ணிலிருந்து கல்லூரி வாட்ஸ்அப் குழுவிற்கு ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ரேஷ்மா நிர்வாணமாகவும், அவருடன் ஒரு நபர் இருப்பதும் தெரியவருகிறது. இருப்பினும், அந்த வீடியோவில், அந்த நபரின் முகம் தெரியவில்லை.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவியின் தந்தைக்குத் தகவல் அளித்தது. இதையடுத்து ரேஷ்மாவின் தந்தை, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும், காவல்துறை இந்த புகாரின் மீது துரிதமாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பியூஷின் வீடும் பூட்டப்பட்டிருந்தது. மேலும், பியூஸ் வாடகைக்குத் தங்கியிருந்த வீடும் பூட்டியிருந்த நிலையில், அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் அந்த வீட்டினை சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் ஒரு பெண் நிர்வாணமான நிலையில் சடலமாகக் கிடந்தார். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார் என அடையாளம் காண இயலவில்லை. இந்த நிலையில், அந்த பெண் அணிந்திருந்த சாக்ஸை வைத்து, ரேஷ்மாவின் தந்தை இது ரேஷ்மா தான் என அடையாளம் காட்டினார். ரேஷ்மாவின் கழுத்தில் கயிறு தழும்புகள் இருந்ததால், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, ரேஷ்மாவின் தந்தை, ‘பியூஸ் தனது மகளை மன ரீதியாக துன்புறுத்தி, கொலை செய்துள்ளார்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தற்போது பியூஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Follow Us