திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் மணி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரியைச் சேர்ந்தவர் 21 வயதான சந்தியா. பி.காம் பட்டதாரியான சந்தியாவுக்கும்,  மணிக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. பின்னர் பெரியோர்கள் முன்னிலையில் மணி மற்றும் சந்தியா இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்திருக்கிறது. 

Advertisment

அதன்படி இருவருக்கும் கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருப்பதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மணமகன் வீட்டில் திருமணத்திற்கு முன்பு குலதெய்வத்திற்கு சாமி கும்பிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனால், திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன்பே சந்தியா குடும்பத்தினர் மணமகன் வீட்டுக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் கோவில் வழிபாடு எல்லாம் நன்றாகவே முடிந்திருக்கிறது. 

Advertisment

இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் இருந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக சந்தியா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சந்தியா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் குளியலறையின் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கதவும் உள் பக்கமாகத் தாழ்பாள் போடப்பட்டிருந்தது.

பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற உறவினர்கள், அங்கே சந்தியா மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு சந்தியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். 

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதனை மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தியா எப்படி உயிரிழந்தார்? ஏன் உயிரிழந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில், மணப்பெண் சந்தியா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இரு வீட்டாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.