திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை ஐய்யாசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 78). இவருக்கு திருமணமாகி ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவி உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் லோகநாதன் மற்றும் அவரது மகன் ஹரிஷ் குமார் (வயது 35) இருவரும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஹரிஷ் குமார், கடந்த 10 வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் தந்தை மகனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மகனுக்கும் தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஷ் குமார், நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் லோகநாதன் வீட்டில் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த போது அவரை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

Advertisment

ki

இதில் தந்தை லோகநாதன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அதன் பின்னர் மகன் ஹரிஷ் குமார் தந்தை சடலத்தின் அருகிலேயே உறங்கி உள்ளார். விடியற்காலை எழுந்த பின்னர் அப்பா இறந்து விட்டதாக தங்கையின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் அருகில் இருந்தவர்களுக்கு போன் செய்து விசாரிக்க சொல்லியுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது லோகநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த ஹரிஷ் குமாரை, கைது செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் தந்தையை மகன் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisment