ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள கண்ணாடி பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மனைவி சுமதி (41). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சுமதி நேற்று முன்தினம்(28.7.2025) அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலைக்குச் சென்றிருந்தார். அன்று மாலை, அவர் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது கையில் ஏதோ கடித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கு சென்ற கணவர் செல்வம், மனைவி சுமதியை பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், உயர் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமதியைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். விசாரணையில், சுமதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.