காஞ்சிபுரம் மாவட்டம் சின்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் சபரிவாசன். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் சபரிவாசன் தனது நண்பர்களுடன் சாலையில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வெறி நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால், சிறிய அளவிலான காயங்களும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டில் சொன்னால் தன்னை அடிப்பார்களோ என்ற அச்சத்தில், சபரிவாசன் இது குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
அடுத்த சில நாட்களில் அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவர் ரேபிஸ் நோய் பாதிப்பிற்கு ஆட்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நாய்க்கடி குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டிருப்பினும் இது போன்ற சம்பவங்கள், பெரும் தூரத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், “தெரு நாய்கள் ஆடு, மாடு மற்றும் மனிதர்கள் என அனைவரையும் கடிக்கின்றது. இதனால், இங்கு ஆடு, மாடுகள் வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மனிதர்களையும் இந்த நாய்கள் கடிக்கின்றன. கடிபட்டவர்கள் உரிய நேரத்தில் முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் தங்களை தற்காத்து கொள்கின்றனர். இருப்பினும், இந்த சிறுவனுக்கு இப்படி நடந்தது என்பது கடைசி நேரத்தில் தெரியவந்த காரணத்தினால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதே போல கடந்த மாதமும் ஒரு குழந்தை இறந்துவிட்டது. இதனால் எங்களுக்கு இங்கு வாழ்வதற்கு அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, இந்த நாய்களை பிடித்து செல்லவேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow Us