கடலூரில் வருவாய் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்குச் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணியாற்றும் வருவாய்த்துறையினர் புதன்கிழமை(25.6.2025) வேனில் புறப்பட்டு கடலூர் நோக்கிச் சென்றனர்.
அப்போது வேன் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் செல்லும் போது எதிரே சென்ற பேருந்து திடீரென பிரேக் போட்டதால் பின்னால் சென்ற வேன் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த வருவாய்த் துறையினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அவசர ஊர்தி மூலம் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையறிந்த சிதம்பரம் தொகுதி எம் எல் ஏ பாண்டியன் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தனர்.