Tragedy befalls young man after bleeding while playing PUBG Photograph: (game)
PUBG விளையாடும் போது மூளையில் திடீரென ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டில் ஒரு இளைஞர் ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு PUBG விளையாடும் போது திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரத்த அழுத்தம் அதிகரிப்பு தான் இந்த இறப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கைர் நகரைச் சேர்ந்த இளைஞர் முகமது கைஃப். இவர் வீட்டில் ஆன்லைன் கேமான பப்ஜி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அப்படி விளையாடும் போது திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், 'கைஃப் இரு காதுகளிலும் ஹெட்ஃபோன்களுடன் இரவு வெகுநேரம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கடுமையான தலைவலி இருப்பதாக புகார் கூறி மயங்கி விழுந்தார். அவரது உடல் நிலையைக் கண்டு பதறிப்போன நாங்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவரது உடல்நிலையின் தீவிரத்தை கவனித்த அங்குள்ள மருத்துவர்கள், உடனடியாக டெல்லியில் உள்ள ஒரு சிறப்பு தனியார் மருத்துவமனைக்கு அவரை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சென்று தீவிர மருத்துவச் சிகிச்சை அளித்தும் பலனின்றி கைஃப் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
கைஃப் அனுமதிக்கப்பட்ட போது அவரது இரத்த அழுத்தம் 300 ஐ தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த திடீர் அதிகரிப்பு மூளைக்குள் செல்லும் இரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தியது. இதனால் மிகப்பெரிய உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது' என தெரிவித்துள்ளனர்.
கைஃப்பின் தந்தை ஃபரூக் கூறுகையில், 'என் மகன் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக உயர் இரத்த அழுத்தத்துடன் போராடி வந்தான். கைஃப் சிகிச்சையில் இருந்த நிலையில் பிழைப்பார் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு ஆபத்தான திருப்பத்தை கொடுக்கும் என்று குடும்பத்தினர் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை' என்றார்.
Follow Us