கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் தீயணைப்புத் துறையில் ஒப்பந்தப் பணியில் உள்ளார். இவரது மனைவி கோவையைச் சேர்ந்த தீபிகா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஐவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த அவினாஷ் குழந்தையைத் தூக்கி முத்தமிட வந்துள்ளார். இதனைக் கண்ட தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தமிட வேண்டாம் என அவினாஷை கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

Advertisment

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அவினாஷ் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து, தீபிகாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வெட்டுப்பட்ட தீபிகா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்து பார்த்த போது தீபிகா உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் தீபிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வந்த தீபிகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மன்னார்காடு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, வீட்டில் கையில் அரிவாளுடன் இருந்த அவினாஷை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், விசாரணையில் பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என மனைவி கூறியதால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில்,  அவினாஷ் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்ததும், இரண்டுமாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் இந்த மன்னார்காடு பகுதிக்குக்  குடிபெயர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவினாஷ் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக உறவினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.