Tragedy befalls mother and daughter after house wall collapses
சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதை (69 ). இவரும், இவரது மகள் ஜெயாவும் (40 ) தங்களது வீட்டில் நேற்று (21-10-25) இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் வீட்டின் சுவர் நனைந்து இடிந்து விழுந்துள்ளது.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். ஜெயா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக ஜெயாவை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். மழையால் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை அறிந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். ஜெயா திருமணமாகி கணவன் இறந்ததால் அவரது தாய் வீடான ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.