கடலூர் திருப்பாப்புலியூர் பகுதியைச் சேர்ந்த பலராமன் (65), சிவில் இன்ஜினியர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் சி. கொத்தங்குடி பகுதியில் உள்ள முத்தையா நகரில் தங்கி, அப்பகுதியில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவியும் பிள்ளைகளும் பிரிந்து சென்றதால், இவர் தனியாக வாடகை வீட்டில் தற்போது வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உடல் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலை வாங்க யாரும் வராததால், அண்ணாமலை நகர் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவர் வசித்த வீட்டைச் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், வீட்டில் ரூ.1.50 லட்சம் பணமும், 74 சவரன் தங்க நகையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை ஒப்படைக்க இவரது மனைவியையும் பிள்ளைகளையும் தேடும் பணியில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களும், இவரிடம் கட்டிடப் பணியில் ஈடுபட்ட சிலரும் கூறுகையில், இவர் பண விஷயத்தில் மிகவும் கெடுபிடியாகவும், பணத்தைச் சேமிப்பதில் குறியாகவும் இருந்ததால் குடும்பம் பிரிந்து சென்றதாகவும், தற்போது அவர்கள் சென்னையில் வசித்து வருவதாகவும், இவருக்கும் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அவரது மனைவியும் பிள்ளைகளும் தொலைபேசி எண்ணில் தொடர்ந்து தொடர்பு கொண்ட போனை எடுக்க மறுக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.