தேனி மாவட்டம், கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் - சுகன்யா தம்பதியரின் மகன் சாய் பிரகாஷ் (வயது 13), உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கால் பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவனாக அறியப்படுகிறார்.
வழக்கம்போல், மாலை வேளையில் பள்ளி முடிந்த பிறகு, பள்ளியின் விளையாட்டுத் திடலில் சாய் பிரகாஷ் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார். தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த சரவணனின் மகன் திபேஷ் (வயது 19), சென்னையில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். ஈட்டி எறிதல் விளையாட்டு வீரரான திபேஷ், போட்டிகளுக்கு தயாராகும் வகையில், கூடலூரிலிருந்து ராயப்பன்பட்டி பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சிக்காக வந்து செல்கிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 9, 2025 அன்று, திபேஷ் வழக்கம்போல் ராயப்பன்பட்டி பள்ளியின் விளையாட்டுத் திடலில் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் எறிந்த ஈட்டி, அருகில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷின் தலையில் தவறுதலாகக் குத்தியது. இதில் சாய் பிரகாஷ் பலத்த காயமடைந்தார். சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறிய நிலையில், உடனடியாக வந்த ஆசிரியர்கள் சிறுவனை தூக்கிக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
கம்பம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சாய் பிரகாஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவன் காயமடைந்த இந்தச் சம்பவம், ராயப்பன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.