Toll booth staff hit Lawyer in barrage at uttar pradesh
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் (01-02-26) ஏராளமான வாகனங்கள் சாலையில் வரிசையாக அணிவகுத்து நின்றுள்ளன. அப்போது அந்த வழியாக சோன்பத்ராவைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் காரில் பயணித்துள்ளார். வழக்கறிஞரான இவருடன் மேலும் மூன்று நபர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது, சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், ஏன் அவ்வாறு வாகனங்கள் நிற்கின்றன என்பதற்கான காரணத்தை அறிந்து வருமாறு, தன்னுடன் வந்திருந்த நவீன்குமார் என்பவரிடம் ஆர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து நவீன், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் இது பற்றி கேள்வி எழுப்பிய போது முறையாக பதிலளிக்காமல் நவீனை மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
நீண்ட நேரமாக நவீன் வராததால், என்ன ஆனது என்பதை அறிந்து வருமாறு அவினேஷ் துபே என்பவரை ஆர்த்தி அனுப்பி வைத்துள்ளார். அவரும் நீண்ட நேரம் வராததால், தானே நேரில் சென்று பார்த்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது, அவர்கள் இருவரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தாக்குதலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஊழியர்கள் இவரையும் சேர்த்துத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி ஊழியர்களை கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், ஆத்திரம் தாங்க முடியாமல் அங்குள்ள சுங்கச்சாவடியை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த கலவரத்தையடுத்து, சிறிது நேரத்தில் காவல்துறை அங்கு வந்து, வழக்கறிஞர் மற்றும் அவருடன் வந்திருந்த மூன்று நபர்கள் மீதும் தாக்குதல் நடத்திய ஊழியர்களை கைது செய்தனர். மேலும், தாக்குதலில் காயமடைந்த நவீன் மற்றும் அவினேஷ் ஆகியோரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் மற்றும் அவருடன் வந்தவர்களையும் தாக்கிய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரப் பிரதேசம் வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில், இந்தத் தாக்குதல் சம்பந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us