Today is the last day to add your name to the voter list at SIR
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்காளர்களாக உள்ளவர்களிடம் இருந்து பெற்ற எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்பி அதை பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியானது.
அதில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எஸ்.ஐ.ஆருக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் முகாம் நடத்ததப்பட்டது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கு இன்றே (18-01-26) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். உயிரிழந்த வாக்காளர்கள் போக, 53.65 லட்சம் பேர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. தமிழ்நாட்டின் இறுது வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us