பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அதன் பின்னர் விடுவித்தனர். இதனையடுத்து அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் சென்னை திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கடந்த (05.11.2025) மெரினா கடற்கரையில் உள்ள கடலில் இறங்கி தூய்மை பணிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 51 பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட 83 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று (08.11.2025) 100வது நாளை எட்டியுள்ள நிலையில் ரிப்பன் மாளிகை அருகில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் கலைஞர் நினைவிடத்திலும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 100ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரிப்பன் மாளிகையில் திடீரென ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் வழக்கத்தை விட அப்பகுதியில் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow Us