கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ளது எழுச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் புத்தகப் பையில் வைத்து வகுப்பறைகளுக்குள் கொண்டு வந்தது தெரிய வந்தது. அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஆறாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களின் புத்தகப் பையைச் சோதனை செய்தபோது இந்தத் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்கள் வைத்திருந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகம் இது குறித்து தகவல் தெரிவித்தது.
இது தொடர்பாக தகவல் வெளியில் கசிந்த நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பள்ளி சிறுவர்களிடம் குட்கா குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எழுச்சிபாளையத்தில் உள்ள லோகு மளிகைக் கடையில் இருந்து இந்தக் குட்கா பொருள்கள் வாங்கியிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்தக் கடையின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்து அவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கிராம மக்கள் கருமத்தம்பட்டி காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் அந்தக் கட்டிடத்தின் உள்ளே பதுக்கி வைத்திருந்த குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். கருமத்தம்பட்டி காவல்துறையினர் அவற்றை எடை போட்டுப் பார்த்தனர். அதில் 141 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்த நிலையில் அவற்றைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விநியோகித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எழுச்சிபாளையம் கხை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. இவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவர்களைச் சந்தேகத்தின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மிட்டாய் என நினைத்து இந்தப் போதைப் பொருட்களை வைத்திருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே குழந்தைப் பருவத்தில் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். 141 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. கிராமத்தில் இது போன்ற பெரிய அளவில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். தொடர்ந்து அனைத்துப் பகுதிகளில் உள்ள கடைகளையும் கண்காணிக்க வேண்டும்” என்றனர்.
குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.