கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சேலை விற்பதாக வந்த நபர்களின் வாகனத்தை சோதனை செய்தபோது சேலை பேக்கிங் உள்ளே குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்துள்ள கடவாச்சேரி மேம்பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் வழக்கம்போல வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை எதேச்சையாகச் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் மூட்டையாக மூட்டையாக சேலை இருந்தது. விற்பனைக்காக கொண்டு வந்ததாக வாகனத்தில் வந்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, துணி மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தபோது சேலைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.

Advertisment

காரில் வந்த வடமாநில நபர் மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த இருவர் என உட்பட மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொத்தங்குடி தெருவைச் சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களின் பெயர்களும் பாலமுருகன் எனத் தெரிந்தது. அந்த வடமாநில நபரின் பெயர் தர்மராஜ் என்பதும் தெரிந்தது. பீடாகடை நடத்தி வந்த தர்மராஜ் உடன் இரு இளைஞர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டு மூவரும் திட்டமிட்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பதை மேற்கொண்டு வந்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள இரண்டு பாலமுருகன்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.