தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார். இத்தகைய சூழலில் தான் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் 7வது நாளாக இன்று (27.07.2025) சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று (27.07.2025) அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து முதல்வரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் இந்த மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதே சமயம் செல்போன் எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.