Thol. Thirumavalavan's criticized BJP about kamal Haasan's parliament speech
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (08-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அமெரிக்க அரசோடு இந்திய அரசு மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு விரோதமானது. குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாய சங்கங்களின் தலைவர்கள், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்த கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை நல்குகிறது, அதை வழிமொழிகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் சதி முயற்சிக்கு பிரதமர் மோடி பலியாகிவிட்டார். இந்திய நாட்டு மக்களின் நலன்களை விட ஏகாதிபத்தியத்தின் நலன்கள், கார்ப்பரேட்டர்களின் நலன்கள் தான், இந்த ஆட்சியாளர்களுக்கு முதன்மையானதாக இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய மக்கள் அனைவருமே எதிர்க்கிறார்கள். எனவே மோடி இதனை பரிசீலிக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது. எங்களுக்கு தனிப்பட்ட முறையிலே எந்த ஒரு சமூகத்தின் மீதும் காழ்புணர்ச்சி கிடையாது. பா.ம.க ஏற்கனவே எடுத்த சோசியல் இன்ஜினியரிங் என்கிற நிலைப்பாட்டால் தான் நாங்கள் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய முடிவை எடுக்க நேர்ந்தது. அந்த முடிவைத்தான் நான் மறுபடியும் மறுபடியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதில் மேற்கொண்டு கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கமல்ஹாசன், சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அது போதும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் தான் பாஜகவினர் கதறுகிறார்கள். வாய்க்கு வந்ததை சொல்லி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணன் கமல்ஹாசனுடைய உரைக்கு கோனார் உரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் அவர்களின் தமிழ் ஞானம். உரைநடையை கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு கோனார் உரையை தேடும் அளவுக்கு தமிழை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்துதெரிய வருகிறது” என்று பேசினார்.
Follow Us