ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், 7 நாட்கள் பொது விடுமுறையும் விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் கமேனியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்படுவார்கள் எனவும், இதற்காக வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் நடவடிக்கை எந்த நேரத்திலும் தொடங்கும் எனவும் ஈரான் காவல் படை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதே சமயம் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தலைவர்களை 'அசுத்தமான குற்றவாளிகள்' என்று அழைத்திருந்தார். அதோடு, அவர்கள் பேரழிவு தரும் பதிலடிகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியதாகச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்பு எப்போதும் இருந்ததை விட, இன்று ஈரானியர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் அவர்கள் அதைச் செய்தால், இந்த விவகாரத்தில் இதுவரை கண்டிராத ஒரு வலிமையுடன் நாங்கள் (அமெரிக்கா) அவர்களைத் தாக்குவோம். இது உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us