எஸ்.ஐ.ஆரை ஏன் எதிர்க்கிறோம்?  என எஸ்.ஐ.ஆர். குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தொடர் எதிர்ப்புகளையும் மீறி, எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கிவிட்டது. மக்கள் நிறைய பேருக்கு, எஸ்.ஐ.ஆர். பற்றி இன்னும் முழுதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். .ஐத் தி.மு.க. ஏன் எதிர்க்கிறோம் என்று விளக்கவும், நம்முடைய வாக்குரிமையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று வழிகாட்டவும்தான் இந்த வீடியோ. சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. 

Advertisment

எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை; ஆனால், போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு. தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் – ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ஏற்கனவே விளக்கியிருக்கிறார். கேரள மாநிலத்தின்  முதலமைச்சர் பினராயி விஜயனும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மமதாவும்கூட இந்த எஸ்.ஐ.ஆர்.ஐத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.  

Advertisment

நாமும், எஸ்.ஐ.ஆர். அறிவித்தபோதே, இது சதி என்று உணர்ந்து எதிர்த்தோம். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசினோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டித் தீர்மானம் போட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். வரும் 11ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறோம். அதற்கு முன்பு, எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கிறது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதோ, எனக்குக் கூட, இந்த எனுமரேஷன் ஃபார்ம் கொடுத்திருக்கிறார்கள். உங்களில் சிலர் கையிலும் இந்த ஃபார்ம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். 

mks-dmk-1

இதில், முதலில் நம்முடைய விவரங்களைக் கேட்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்? அனைவரும் தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?. வாக்காளரின் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில், முதலில் பெயரும், பிறகு, வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, மீண்டும் உறவினர் பெயர் என்று கேட்கப்பட்டிருக்கிறது. முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா? அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட, தேர்தல் ஆணையம் அந்தப் படிவத்தை ஏற்றுக் கொள்ளாமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிடும் ஆபத்து இருக்கிறது. 

Advertisment

நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நன்றாகப் படித்த, அறிவார்ந்த, பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, இந்தக் கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் அவர்களுக்கு தலை சுற்றிவிடும். இந்தப் படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, “தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரி என்ன சொல்கிறார், “உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒட்டலாம்” என்று அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இது இன்னொரு இடியாப்ப சிக்கல். 

eci

ஒருவேளை, போட்டோ ஒட்டவில்லை என்றால், என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுமா?. பறிக்கப்படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி, கையில்தான் இந்த முடிவு இருக்கிறது, இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது! இவ்வாறு, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக, அனைத்து இடத்திலும் குழப்பம்தான். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, சில அதி மேதாவிகள், “இந்த எஸ்.ஐ.ஆர். பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தானே?. பிறகு ஏன் தி.மு.க. எதிர்க்க வேண்டும்?” என்று புரிதலற்ற, உண்மைக்குப் புறம்பான விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள். 

ஒரு பணியாளரைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவர் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார். மக்களை திசைதிருப்பினால் போதும் என்று தவறான தகவலைப் பரப்பக் கூடாது. ஏதாவது பொய் சொல்லி, எஸ்.ஐ.ஆர்.-ஐ எப்படியாவது நடத்திடலாமா? ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கிவிடலாமா? என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.