'இந்தியா- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் சவால்'  என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத்துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளிக்க அமெரிக்கா அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தது .இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்தது.

Advertisment

பின்னர் பிப்ரவரியில் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் என்று அறிவித்தது. தற்போது ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்க 30 நாட்களுக்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருப்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

ஏற்கனவே பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை அறிவிப்பு செய்த நிலையில் நமது பிரதமர் மௌனம் காத்து வந்தார். தற்போதும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் மௌனமாகவே பிரதமர் இருக்கிறார். இந்தியாவின் விருந்தினர்களாக வந்த ஈரான் கப்பல்படையினரின் கப்பலை இலங்கை அருகே அமெரிக்கா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான ஈரானிய கடற்படை வீரர்கள் பலியாகினர். இதுகுறித்தும் எந்த கண்டன அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் தற்போது மிகப்பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

Advertisment