'This is a black day, a black bill' - MK Stalin strongly condemns Photograph: (dmk)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (21-08-25) முடிவடைய உள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் போன்றவர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலோ அல்லது காவலில் இருந்தாலோ அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (20-08-25) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மசோதாவில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்த ஒரு குற்றச்சாட்டின் கீழும் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31 வது நாளில் அவர்கள் தனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை ராஜினாமாவை சமர்பிக்கவில்லை என்றால் அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனவும் இந்த புதிய மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷா தாக்கல் செய்த மசோதா நகலை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அமித்ஷா மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், '130வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல - இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா.
30 நாள் கைது = தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல். விசாரணை இல்லை, தண்டனை இல்லை - வெறும் பாஜகவின் உத்தரவு. சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன: வாக்குகளைத் திருடுதல், போட்டியாளர்களை அமைதிப்படுத்துதல் மற்றும் மாநிலங்களை நசுக்குதல்.
ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன், மேலும் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றும் இந்த முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.
பிரதமரின் கீழ் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றுவதன் மூலம் அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளங்களையும் களங்கப்படுத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
வாக்கு திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பாஜக அரசு அமைக்கப்பட்டதற்கான அடிப்படையே கடுமையான கேள்விக்குறியாக உள்ளது. மோசடி மூலம் மக்களின் ஓட்டை திருடிய பாஜக, இப்போது இந்த அம்பலப்படுத்தலில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைத்திருப்ப தீவிரமாக முயற்சிக்கிறது. அதற்காக, அவர்கள் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மசோதாவின் திட்டம் தெளிவாக உள்ளது. இது பாஜக, மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ள அரசியல் எதிரிகள் மீது பொய்யான வழக்குகளைப் போடவும், 30 நாள் கைது கூட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு காரணமாகக் கருதி, எந்தவொரு தண்டனையோ அல்லது விசாரணையோ இல்லாமல் அவர்களை பதவி நீக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த அரசியலமைப்புக்கு முரணான திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும், ஏனெனில் குற்றம் வெறும் வழக்குப் பதிவு செய்வதன் மூலம் அல்ல, விசாரணைக்குப் பிறகு தான் தீர்மானிக்கப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகளை மிரட்டுவதற்கான ஒரு தீய முயற்சி இது - "எங்களுடன் இணைந்திருங்கள் அல்லது இல்லையென்றால்..." எந்தவொரு வளர்ந்து வரும் சர்வாதிகாரியும் முதலில் செய்ய வேண்டியது, போட்டியாளர்களைக் கைது செய்து பதவியில் இருந்து அகற்றும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்குவதாகும். இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது' என தெரிவித்துள்ளார்.