நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் கோவிலின் செயல் அலுவலகத்தில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை பைப்புகளால் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த பகுதியில் பைப்புகள் உடைந்து சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதோடு, 5 பேர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இறந்த இளைஞர் அஜித்தின் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.
அஜித்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அது தொடர்பான முதற்கட்ட அறிக்கை தகவகள் வெளியாகியது. அதில், அவர் கடும் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பதாகவும், உட்புற உறுப்புகளில் பலவிதமான காயங்கள், ரத்த கசியல் போன்ற மரணிக்க காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட கொடுங்காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.