கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (03.12.2025), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். 

Advertisment

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. இதனையடுத்து மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். 

Advertisment

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று (04.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இன்று (அதாவது நேற்று) திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றிய நகலை நாளை (அதாவது இன்று - டிசம்பர் 05) காலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை இன்று காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று தீபமேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்தார். மேலும், பா.ஜ.கவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். 

thiruparankundram-issue-bjp-nainar-h-raja

அதனால் அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும், பா.ஜ.க தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அச்சமயத்தில்,  கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்த நிலையில், போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்களை  போலீசார் கைது செய்தனர். 

Advertisment

இதனால் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதி பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக நேற்று (04.12.2025) இரவு தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

sc-ani

அதில், “தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விரைவாக விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (05.12.2025) வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, “வழக்கு நடைமுறைப்படி 2  நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவானது வரும் திங்கட்கிழமை (08.12.2025) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பட்டியல் நாளை (06.12.2025) மாலை அதிகாரப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.