கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

Advertisment

அதன்படி இந்த வழக்கு இன்று (02.02.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் கோவில் இணை ஆணையர் இனிகோ திவ்யன், செயல் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி உள்ளனர். தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் காணொளியில் ஆஜராகி உள்ளனர். அப்போது இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அதோடு இந்த வழக்கை முடித்து வைக்கவும் கோரிக்கை விடுத்தார்.  

Advertisment

மேலும், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “அரசு தரப்பில் உள்நோக்கத்துடனும், திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இல்லை. அங்கிருந்த சூழல் அவ்வாறு இருந்தது. 1500 பேர் மலையேற முயன்றனர். இருப்பினும் அதனை கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. மதுரை ஏற்கனவே மிகவும் பதற்றம் மிகுந்த (சென்சிட்டிவ்) பகுதி ஆகும். எனவே  மதக் கலவரம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு தான் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்தோம். எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. 

இந்த சூழல் காரணமாக நீதிமன்றம் திட்டமிட்டு அரசு மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யக்கூடாது” என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “நான் இந்த வழக்கு தொடர்பாக சில விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சில வாரப் பத்திரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், “அதுபோன்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதிகாரிகள் ஏதும் அது போன்று சொல்ல மாட்டார்கள்” என விளக்கம் அளிக்கப்பட்டது.  இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது.

Advertisment