Thirumavalavan tried to siege the US embassy
அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், பல கட்டடங்கள் சேதமடைந்து ஈரான் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நடக்கும் மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும்இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார். அதே போன்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சையித் அப்தோல்ரஹீம் மௌசவி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஸீஸ் நாசிர்ஸதேஹ் ஆகியோரும் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் இந்த போர் சூழலால், உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானில் நடக்கும் போரை நிறுத்த வேண்டும் என்று முழக்கிமிட்டும், அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட இன்று பேரணியாக வந்தனர். அவர்கள் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு குவிந்திருந்த போலீசார், அவர்களை தடுத்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Follow Us