Thirumavalavan indirectly criticizes Vijay
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் படம் ‘அரிசி’. அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று (14-02-26) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
அதன்படி, இந்த நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இடதுசாரிகள் கலைத்துறையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கோடிக்கணக்கில் வருமானத்தை இழந்து அரசியலுக்கு வருவதால் மட்டுமே ஒருவரை முதல்வராக்க வேண்டுமா? அவர்கள் மக்களுக்கு போராடியது உண்டா? இங்கே கருத்தியலுக்கு, போராட்டங்களுக்கு, தியாகங்களுக்கு, முற்போக்கு சிந்தனைகளுக்கு தரப்படுகிற முக்கியத்துவத்தை விட இத்தனை கோடி வருமானம் வரும், அந்த வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் எங்கள் தலைவர் என்று சொல்லக்கூடிய நிலை தமிழகத்தில் இருக்கிறது.
திரைப்படத்துறையில் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார், ஆகவே அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கின்றனர். ஊர் ஊராய் செல்ல வேண்டாம், மக்களுக்காக போராட வேண்டாம், வழக்குகளை சுமக்க வேண்டாம், தடியடிகளை வாங்க வேண்டாம், சிறைச்சாலை செல்ல வேண்டாம் எதுவும் செய்ய வேண்டாம், திரையில் தோன்றினால் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட முடியும் என்கிற நிலை உள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு நிலை” என்று பேசினார்.
Follow Us