சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தையும், கரூர் துயர சம்பவத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பேசுவது நகைப்பிற்குரியது. இரு சம்பவங்களின் பின்னணியும், சூழலும் முற்றிலும் வேறுபட்டவை. உயிரிழந்த 41 பேரின் மரணத்தை கேலி, கிண்டல் பேசுவது போல அனுதாபமின்றி எள்ளி நகையாடுவது அரசியல் நாகரிகமல்ல. தூத்துக்குடியில் போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் கரூரில் நடிகர் விஜயை காண வந்த கூட்டத்தில் ஏற்பட்ட துயர நிகழ்வே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. இந்த இரண்டையும் ஒரே கோட்டில் வைத்து அரசியல் செய்ய முயல்வது தவறான அணுகுமுறை.
தூத்துக்குடி சம்பவத்தின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் செல்லவில்லை என கூறுவது உண்மையை மறைக்கும் முயற்சியே. திமுகவிற்கும் தவெக-விற்கும் போட்டி என பேசுவது, பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என நினைப்பது போல் உள்ளது. யாருக்கு யாருடன் அரசியல் போட்டி என்பதை மக்கள் தீர்ப்பே இறுதியாக நிர்ணயிக்கும்; அது தேர்தலுக்குப் பிறகே தெளிவாக தெரியும். ஒவ்வொரு கட்சியின் உண்மையான வலிமையும் பலவீனமும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே வெளிப்படும். மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவரான எடப்பாடி பழனிசாமி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மீண்டும் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டிடிவி தினகரன் அதிமுக–பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஜெயலலிதா காலத்திலிருந்த அதிமுக வாக்குகள் சிதறாமல் கூட்டணிக்கே திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே மறைந்த விஜயகாந்தின் அடிப்படை கொள்கை. அதனை முன்வைத்து தேமுதிக தக்க அரசியல் முடிவை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக யாருடைய வீட்டு வாசலையும் தட்டப் போவதில்லை. கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அதிமுக பலவீனமானது என கூறுவது அடிப்படை உண்மையை அறியாத பேச்சு. யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அதிமுக பலவீனமான கட்சி அல்ல. இதை கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பலவீனமானவர் அல்ல; பலம் பொருந்திய, அனுபவம் வாய்ந்த தலைவர்.
திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சிகள் அல்ல. சின்னச் சின்ன கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டதால் தாங்கள் மிகப் பெரிய அரசியல் சக்தியாக மாறி விட்டதாக நினைப்பது தவறான பின்னோக்குச் சிந்தனை. அரசியல் களத்தில் நேரடியாக மோதும் சக்தி கொண்ட இயக்கங்கள் அதிமுகவும் திமுகவும்தான். கூட்டணியில் உள்ள சில கட்சிகள் “எங்களால்தான் வெற்றி” என உரிமை கோருவது அரசியலை விளையாட்டாக மாற்றும் செயல். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் இடையேயான நேரடி அரசியல் மோதல். இதில் எடப்பாடி வெற்றி பெறுவார்; ஸ்டாலின் வீழ்ச்சியை சந்திப்பார் என்பதே நடக்கப்போகும் உண்மை. தேர்தல் முடிந்த பிறகு ஐந்து அல்லது ஆறு மாதங்கள் கழித்து கூட “எங்களால்தான் வெற்றி” என கூட்டணிக்குள் கூறிக் கொள்ளலாம். யானை மீது அமர்ந்து செல்லும் போது தாங்களே ராஜா என நினைப்பவர்கள், யானை தும்பிக்கையால் திருப்பி அடித்துத் தள்ளப்பட்டால் செல்லும் திசை தெரியாமல் போய் விடுவார்கள்”என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/31/791-2026-01-31-16-50-02.jpg)