108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தூப்புல் வேதாந்த தேசிகர் மங்களாசாசன உற்சவம் நேற்று நடைபெற்றது. தூப்புல் வேதாந்த தேசிகர் மங்களாசாசன உற்சவத்திற்காக காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறா வினர் மற்றும் வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவது மரபு.
இந்நிலையில் நேற்று மாலை வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடிய நிலையில், மணவாள மாமுனிகளை ஆச்சாரியாராக கொண்ட தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திர பாடல் பாட முன்வந்தனர்.
இதன் காரணமாக வேதாந்த தேசிகரை ஆச்சாரியாராக கொண்ட வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை ஸ்தோத்திர பாடலைப் பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் வரவழைக்கப்பட்டதைத் தொடர்ந்து வடகலை பிரிவினரிடம் விசாரணை மேற்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிகர் சாற்று முறை உற்சவத்தின் போது ஸ்தோத்திர பாடல் பாட தென்கலை பிரிவினருக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
கோவில் நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆண்டு எப்படி பாடலாம் என வடகலை பிரிவு ஐயங்கார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு போட்ட தடை உத்தரவை உதவி ஆணையர் ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தார். அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் எனக் கேட்டு வடகலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து வடகலை பிரிவினர் நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகக் கூறியதையடுத்து தென்கலை பிரிவினர் கலைந்து சென்றனர். குறிப்பாக நேற்று மாலை வடகலை தென்கலை பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.