The Russian man who finished the two russian women in goa
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், சக நாட்டவர்களான இரண்டு பெண்களை கோவாவில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் 37 வயதான அலெக்ஸி லியோனோவ். இவரது காதலி எலெனா கஸ்டனோவா (37). இவர்கள் இருவரும் கோவாவின் அரம்போலில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதியன்று இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லியோனோவ், கஸ்டனோவாவின் கைகளையும் கால்களையும் கட்டி அறையில் அடைத்து வைக்க முயன்றுள்ளார். ஆனால் அதில் இருந்து கஸ்டனோவா தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த லியோனோவ், கத்தியை எடுத்து கஸ்டனோவாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் உத்தம் நாயக் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் அடிப்படையின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லியோனோவை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தனது காதலி கஸ்டனோவாவை கொலை செய்வதற்கு முன்பு ஜனவரி 14ஆம் தேதியன்று மோர்ஜிமில் உள்ள மற்றொரு ரஷ்யப் பெண்ணான எலெனா வனீவா (37) என்பவரை லியோனோவ் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. வனீவா லியோனோவின் தோழி என்று கூறப்படுகிறது. அதன் பின்னர், ஜனவரி 15ஆம் தேதி மாலை தனது காதலி கஸ்டனோவாவைச் சந்திக்க சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள அரம்போலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் கஸ்டனோவாவை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் இரண்டு பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக நாட்டவர்களான இரண்டு பெண்களையும் ஏன் கொலை செய்தார் என்பது குறித்து போலீசார், லியோனோவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us