The person who showed his shoe against D.K. Shivakumar
கர்நாடக மாநிலம், சூர்கோந்தனகொப்பா பகுதியில் 287வது ஸ்ரீ சேவாலால் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில், அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கலந்து கொண்டார். இதையடுத்து, இந்த விழா சம்பந்தமான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திடீரென 20 முதல் 25 வரையிலான நபர்கள் அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிவகுமாரைப் பேசவிடாமல் தடுத்துக் கூச்சலிட்டனர்.
அந்த போராட்டத்தில், அரசு உள் ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியதில் லம்பானி சமூகத்தினர் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அவர்களில் சிலர் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர். மேலும், சிவகுமாரை, ‘திரும்ப போ’ என்று கோஷங்களை எழுப்பினர். அந்த சமயத்தில் ஒரு நபர், சிவகுமாரை நோக்கிச் செருப்பைக் காட்டியும், அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் அதிகாரிகள் சாகர் அத்தர் வாலா உள்ளிட்டோர் அந்த கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் அதிகாரிகள் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. மாறாக, தொடர்ந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னோக்கி வந்தனர். இந்த காட்சிகளை, அரசுத் துறையின் புகைப்பட கலைஞர்கள் வீடியோ எடுத்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 25 பேருக்கும் எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us