திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடி (வயது 59). இவருடைய மனைவி மலர். இந்த தம்பதியினருக்கு ஏகநாதன் மற்றும் மேகநாதன் என 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் குடி பெயர்ந்த நிலையில் முதல் மகனான ஏகநாதனும் சென்னையில் உள்ளார். இரண்டாவது மகனான மேகநாதன் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வேடி தனிமையில் வசித்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மேகநாதன் மற்றும் அவருடைய மனைவி திருப்பூரில் இருந்து திருப்பத்தூருக்கு வந்து வேடியை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் மேகநாதன் தனது பிள்ளைகளையும் திருப்பூரிலிருந்து அழைத்து வந்து திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். அரையாண்டு தேர்வு முடிந்த பின்பு விடுமுறையில் பேங்க் புக்கு மற்றும் ஆதார் கார்டில் கரெக்ஷன் செய்ய தனது பிள்ளைகளுடன் மேகநாதன் மற்றும் அவருடைய மனைவியான சீதா ஆகியோர் திருப்பூருக்கு சென்றுள்ளனர். மீண்டும் மகன், மருமகள் ஆகியோர் தன்னை தனியே விட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டார்கள் என நினைத்துக் கொண்டார். இதனால் தனக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லையோ என கவலை அடைந்தார்.
இதனால் மனமுடைந்த வேடி இனிமேல் தனக்கு சாப்பாடு போட கூட யாரும் இல்லை, மீண்டும் தனியாக வாழ வேண்டும் என நினைத்து தனது கழுதை அறுத்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வேடியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவரை பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை,சிறப்பு மருத்துவர் விக்னேஷ் சில மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து வேடியை காப்பாற்றினார். இது குறித்து தகவலறிந்து ஊருக்கு வந்த வேடியின் இரண்டாவது மருமகளான சீதா தனது மாமனாரின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
Follow Us