தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணைக் கால்வாய் 20 கண் பாலம் பகுதியில் இன்று (09.09.2025 - செவ்வாய்க்கிழமை) மதியம் 40 வயது ஒரு பெண், 14 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை, 5 வயது மதிக்கத்தக்கச் சிறுவன், பெண்ணின் கையில் குழந்தை பெட்டில் ஒரு கைக்குழந்தையுடன் நடந்து சென்றுள்ளனர். இவ்வாறு நடந்து சென்றவர்கள் ஓரிடத்தில் நின்று திடீரென கல்லணைக் கால்வாய்க்குள் குதித்துள்ளனர்.
இதனை எதிர்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்துப் பதறி அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அனைவரையும் இழுத்துச் சென்றுள்ளது. ஆனாலும் தண்ணீரோடு போராடி அந்தப் பெண் மற்றும் 14 வயது சிறுமி, 5 வயது சிறுவன் ஆகியோரை சடலமாக மீட்டனர். ஆனால் கைக்குழந்தை வைத்திருந்த குழந்தை பெட் மட்டும் மீட்கப்பட்டது. குழந்தையைக் காணவில்லை. இந்த தகவல் வெளியான நிலையில் போலீசார் தீயணைப்பு வீரர்கள் இளைஞர்கள் உதவியுடன் குழந்தையைத் தேடி வருகின்றனர். 3 குழந்தைகளுடன் ஆற்றுத் தண்ணீரில் குதித்த இளம் பெண் யார்? எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியாமல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே ஆற்றில் குதித்ததற்கான காரணம் தெரிய வரும். 5 வயது சிறுவன் பயந்துவிடக் கூடாது என்பதற்காக அவனுக்குக் கருப்புக் கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருக்கிறார். புது செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் உள்ள தஞ்சை நகரில் ஒரு பெண் தன் குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.