திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு ஆற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரின் சக நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ளது கே.அத்திக்கோம்பை பகுதி. அங்கு வசித்து வந்த பெருமாள் (25) என்ற இளைஞர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்த பெருமாள் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சம்பளம் வாங்கி வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அடுத்தநாள் ஆகியும் பெருமாள் வராததால் அவரது குடும்பத்தினர் சந்தேகம்டைந்தனர். பல்வேறு இடங்களில் அவரைத் தேடியும் கிடைக்காததால் இடையகோட்டை காவல்நிலையத்தில் பெருமாள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்தனர். 

Advertisment

புகாரை அடுத்து போலீசாரும் பல்வேறு இடங்களில் பெருமாளை தேடி வந்தனர். இந்நிலையில் ஜவ்வாதுபட்டி நங்காஞ்சி ஆற்றுப்பாலத்திற்கு கீழே ஆற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்த பொழுது அது தேடப்பட்டு வந்த இளைஞர் பெருமாளின் உடல் என்பது தெரியவந்தது. பெருமாளின் அந்தரங்க உறுப்பானது அறுக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பெருமாளின் உடலானது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பெருமாளின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது பெருமாளுடைய நண்பரான பாறையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (22) என்ற இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் ஸ்ரீதர் தான் பெருமாளை கொடூரமாக கொன்று ஆற்றில் வீசியது தெரிந்தது.

Advertisment

கொலைக்கான காரணம் குறித்த விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பெருமாளும் ஸ்ரீதரும் இயற்கைக்கு மாறான நட்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்துவிட்டு டேம் பகுதியில் பேசிக் கொண்டிருந்த பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் எப்படியோ சமாதானமாகி மீண்டும் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஜவ்வாதுபட்டி நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீதரை பெருமாள் கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் பெருமாளை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பெருமாளின் அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.