உத்தரபிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்தவர் அனிதா சௌத்ரி. இவர் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு, தனது ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ​​நவாபாத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட சகுன்வா துக்வான் காலனி அருகே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தது. அவர் ஒட்டி வந்த ஆட்டோவும் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து அனிதாவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்களாக கருதப்பட்ட, முகேஷ் ஜா, சிவம் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிவம் மற்றும் மனோஜ் ஆகியோர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளியான முகேஷ் ஜா தலைமறைவாக இருந்தார். இதனால் முகேஷ் ஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் முகேஷின், இக்னிஸ் கார் "பெட்வா" ஆற்றின் "நோட்காட்" பாலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அப்பகுதியினை சுற்றி வளைத்தனர். அதே சமயம் அந்த பகுதியில் அவரைக் காணவில்லை. இதன் காரணமாக காவல்துறை தொடர்ந்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து பகவந்த்புராவிலிருந்து கார்குவான் செல்லும் ஒரு மண் சாலையில் காவல்துறை முகேஷை சுற்றிவளைத்தது. இதனையடுத்து முகேஷை கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினர் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/10/siren-police-2026-01-10-20-23-44.jpg)
இதன் காரணமாக காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில், போலீசார் சுட்ட தோட்டா முகேஷின் காலில் பாய்ந்தது. அதன் பின்னர் முகேஷை காவல்துறை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் முகேஷை காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், அவரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து காவல்துறைக் கண்காணிப்பாளர் ப்ரீத்தி சிங் கூறுகையில், "கொலையாளியான முகேஷும், அனிதாவும் சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள், ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அந்த திருமண உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. அனிதா சிறிது காலத்திலேயே முகேஷை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இந்தப் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத முகேஷ், தன்னை அனிதா ஏமாற்றிவிட்டதாகக் கருதியுள்ளார். இதனால், அனிதாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். தனக்கு செய்த துரோகத்திற்குப் பழிவாங்குவதற்காக, முகேஷ் தனது திருமண நாளான (ஜனவரி 4) அன்று இரவு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us